சென்னையில் தவறான பாதையில் வாகனம் ஓட்டியதற்காக, போலீஸ் உயர் அதிகாரியின் அதிகாரப்பூர்வ வாகனத்துக்கு, 500 ரூபாய் அபராதம் விதித்து, சென்னை மாநகர போலீசார் உத்தரவிட்டுள்ளனர். பொதுவாக பொதுமக்கள் தவறு செய்தால் மட்டுமே அபராதம் போடும் காவல்துறை, இந்த முறை அதிகாரிக்கு அபராதம் போட்டு நாங்களும் நேர்மையானவங்க தான் என்பதை சொல்லாமல், சொல்றாங்க போலிருக்கு.
TN 06 BG 1090 என்ற பதிவு எண் கொண்ட அந்த வாகனம் ஒன் வேயில் செல்வதை போட்டோ எடுத்து ஒருவர் டிவிட்டரில் போட்டு இருந்தார். அந்த பதிவுக்கு கீழே தவறான பாதையில் செல்லும் இந்த வாகனத்திற்கு நகர காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா? என்று பதிவிட்டு ஆச்சரியப்பட்டார். சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு போலீசார் பதிலளித்தனர்.
இந்த வாகனம் ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இனி அதிகாரிகள் வாகனமாக இருந்தாலும் கேமராவில் சிக்கி ஆதாரம் இருந்தால், அபராதம் விதிக்கப்படும் என போலீசார் கூறினர்.