நைட் ஷிப்ட் வேலை முடித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார் உதயா. வழியெங்கும் கும்மிருட்டு.. ஒரு ஆண் தனியாக போகவே கொஞ்சம் நெருடலாக இருக்கும் பாதை அது. உஷ்! உஷ்! என்று மூச்சிரைக்க இருபது வயது மதிக்கதக்க இளம்பெண் ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு முன்னே செல்கிறார்.
பார்த்த உடனே உதயாவுக்கு புரிந்துவிட்டது, "வண்டி ரிப்பேர் போல, பாவம் பொண்ணு தள்ளிகிட்டு போகுது" என்று மனதுக்குள் நினைத்துவிட்டார். பெண்ணின் அருகில் செல்கிறார்.
என்னம்மா ஆச்சு.? இந்த நேரத்துல தனியா போயிட்டு இருக்க. வீட்டுக்கு கால் பண்ணலையா..?
வீட்டுல எல்லாம் வெளிய போயிருக்காங்க. நானே போயிருவேன். நீங்க போங்க.
இங்க பாருமா! உன் வயசுல எனக்கு தங்கச்சி இருக்கா. உன்ன அப்படியே ரோட்ல விட்டுட்டு என்னால போக முடியாது. பக்கத்துல பெட்ரோல் பங்க் கூட இல்ல.
பரவாலங்க..! நான் பாத்துக்குறேன்.
என்ன உன்னோட சொந்த அண்ணனா நினச்சுக்கோ. என் பைக்ல பெட்ரோல் நிறைய இருக்கு. பிடிச்சு தரேன். எதுவும் நினைச்சுக்காத!
ம்! சரிங்க அண்ணா!
(பிறகு ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகிறது)
இருந்தாலும், அப்படியே விட உதயாக்கு மனசு வரவில்லை. "இந்த பாப்பா, இது என்னோட நம்பர். போற வழியில எதாச்சும்னா கால் பண்ணு" என்றவாறே நகர்ந்தார்.
ஒரு சில ஆண்கள் செய்யும் தவறுக்கு, பெண்கள் எல்லா ஆண்களையும் தவறாக பார்க்கின்றனர் என்ற உணர்வு உதயாக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்கினாலும், நள்ளிரவில் ஒரு பெண்ணுக்கு உதவிய மகிழ்ச்சியோடு வீட்டுக்கு கிளம்பினார்.