இரவு கண் விழித்து வாகனத்தை இயக்குவது மிக சிரமமான வேலை. நடத்துனர் உள்பட, பேருந்தில் உள்ள அனைவருக்கும் தூங்கும் போது, ஓட்டுனர் மட்டும் விழித்திருந்து கவனமாக இயக்க, ஒவ்வொருவருக்கும் ஒரு சில விஷயங்கள் உதவி செய்யும். நான் வந்த பேருந்தை இயக்கிய டிரைவர் பாக்கு வாயில் போட்டு மெல்லுவாராம். விடிய, விடிய பேருந்தை இயக்குவதற்கு, பாக்கு மெல்லும் போது வரும் சாறு அவருக்கு கைகொடுத்துள்ளது. இதேபோல் ஒவ்வொரு ஓட்டுநரும், ஏதாவது ஒன்றை பயன்படுத்தி, இரவு முழுக்க விழித்து வாகனத்தை இயக்குகின்றனர்.
பெரும்பாலும் இரவு உணவு தவிர்த்தால் உறக்கமின்றி விழிப்புணர்வோடு இயக்கலாம். இதையே பெரும்பாலான ஓட்டுநர்கள் செய்கிறார்கள். இவர்கள் கடமையை செய்கிறார்கள் என்று சொன்னாலும், கடமை மட்டுமே இவர்களை விழித்திருக்க வைப்பது இல்லை. தாங்கள் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏற்றுள்ள பொறுப்பு உணர்வு தான் முக்கிய காரணமாக உள்ளது. கடமை தவறிய டிரைவர்களை கேள்வி கேட்கும் நாம், அதை சரிவர செய்ய நினைப்பவர்களை பாராட்டவும் செய்ய வேண்டும். என்னிடம் பேசிய டிரைவருக்கு புகை, மது போன்ற பழக்கங்கள் இல்லை. பாக்கும் இல்லை என்றால் இரவு பணி மிக கடுமையாக இருக்கும் என்கிறார். அதுவும் அளவுடன் தான் எடுத்துக்கொள்வதாக கூறினார்.
அதுவே தொழில்முறையாக கார் ஓட்டும் ஓட்டுனர்கள், எப்போதும் முன்பின் தெரியாத பாதையில் பயணிக்கும் போது, முன்னால் ஒரு பெரிய வாகனத்தை கடந்து செல்ல அனுமதித்து, அந்த வாகனத்தை 100 அடி விட்டு பின்தொடர்ந்து சொல்கின்றனர். லாரி மாதிரியான வாகனங்களுக்கு பின்னால் போகும்போது, ஸ்பீட் பிரேக்கர் மற்றும் வளைவுகள் ஏதேனும் இருந்தாலும் அவை வேகத்தை கட்டுப்படுத்த உதவும். இந்த வித்தையும் பேருந்து ஓட்டுனர் சொன்னது தான். இது தவிர பிடித்த நபர்களை முன் சீட்டில் அமரச்செய்து பேசிக்கொண்டே வரலாம்.
தொடர்ந்து உடல் அசைவுகள் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டுமாம். நான் பார்த்தவரையில், சிலர் இடது காலை ஆட்டிக் கொண்டே ஓட்டுகின்றனர். கண் அசரும் தருணத்தில் ஓரமாக வண்டி நிறுத்தி சில நேரம் உறங்குவதைப் பார்த்துள்ளேன். சுத்தமா முடியவில்லை என்றால், அதான் பெஸ்ட். சும்மா கட்டுப்படுத்துறேன் பேர்வழின்னு, 60 உயிர்களுக்கு உலை வைக்கும் காரியத்தை யாரும் செய்ய மாட்டாங்க. அப்படி எந்த டிரைவராவது ஓரமா நிறுத்தி தூங்கினால், எதிர்த்து கேள்வி கேட்க வேண்டாம். ஏன்னா, அதில் உங்க உயிரும் அடங்கி இருக்கு.