பால் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு உணவுப்பொருள். தமிழகத்தில் தினந்தோறும் உற்பத்தி செய்யப்படும் பாலின் அளவு சுமார் 2.25 கோடி லிட்டராகும். இதில் அரசின் ஆவின் நிறுவனம் 15 முதல் 20 சதவீதம் பாலை கொள்முதல் செய்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. மீதமுள்ள 80 சதவீதம் பால் தனியார் நிறுவனங்களுக்கு தான் செல்கிறது.
தனியார் நிறுவனங்கள் விற்கும் பாலின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்பதால் ஒரு சிலர் அரசின் ஆவின் பால் வாங்கி பயன்படுத்துவாங்க. ஆனால் மற்ற பால் பிராண்டுகளை பயன்படுத்தும் மக்களும் அதிகமாக உள்ளதால் அவர்கள் அடிக்கடி விலையை உயர்த்தும் போது மக்கள் அனைவரும் நேரடியாக பாதிக்கப்டுகின்றனர். பாலில் ஆரம்பிக்கும் விலை உயர்வு டீக்கடை தொடங்கி ஹோட்டல் கடை வரை எதிரொலிக்கிறது.
பாலின் விலை உயர்த்தப்பட்டால் பால் சார்ந்த உணவுப்பொருட்களான தயிர், வெண்ணெய், நெய் என அனைத்தின் விலையும் உயரும். தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல பால் நிறுவனங்களும் இன்று முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாயில் இருந்து நான்கு ருபாய் வரை விலையேற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு இரண்டு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. அரசை விட தனியார் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மற்றும் பால் பண்ணை உரிமையாளர்கள் தனியார் நிறுவனங்களை அணுகி பால் விற்க தொடங்கிவிடுவர். மற்றொன்று இந்த விலை உயர்வால் மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு எப்படி பல வழிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா அதே போலத்தான் பால் விலை உயர்வும் பல்வேறு உணவுப்பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கும். எனவே அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.