செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவடைந்த சில நாட்களில் அடுத்த நிகழ்வுக்காக தயாராகி வருகிறது மாமல்லபுரம். அடுத்து அங்கு நடக்கவிருப்பது காற்றாடி திருவிழா ஆகும். நாளை தொடங்கவிருக்கும் இந்த திருவிழாவுக்காக பிரத்யேகமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் நடத்தப்படவுள்ளதால் இதுவும் செஸ் போட்டிகளை போல கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் இதற்கான ஏற்பாடுகளை தமிழக சுற்றுலாத்துறை சிறப்பாக செய்து வருகிறது. உள்நாட்டவர், வெளிநாட்டவர் என பலரும் இந்த காற்றாடி திருவிழாவில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். நம் தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில் பல உருவங்களும் கார்ட்டூன் வடிவத்தில் காற்றாடியில் இடம்பெறவுள்ளது.
காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கவுள்ள இந்த காற்றாடி திருவிழாவை கண்டுகளிக்க நபர் ஒன்றுக்கு 150 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. இது மட்டுமின்றி இந்த போட்டியில் கலந்துகொள்ளும் காற்றாடி நிபுணர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட உள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடக்கவுள்ள இந்த காற்றாடி திருவிழா முடிந்தவுடன் பீச் வாலிபால் போட்டி இங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொஞ்சம் கூட கேப் விடாமல் அடுத்தடுத்து பல விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளதால் மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. சர்வதேச போட்டிகள் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகம் வரத்தொடங்கியிருப்பதால் மாமல்லபுரம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக முன்னேறிக்கொண்டு வருகிறது.