கொரோனா பரவுது சரி. அலுவலகங்கள், வங்கிகள், ஐ.டி துறைகள், கல்லூரிகள் ஆகிய அனைத்து மக்கள் கூடும் இடத்திற்கும் ஏன் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற சந்தேகம் ஒரு பக்கம் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து மருத்துவர் அரவிந்த் ராஜிடம் கேட்டோம் நாம்.
டாக்டர்! இந்தியால கொரோனா பாதிப்பு இப்போ தான வந்திருக்கு. ஆபீஸ் வர்றவங்களுக்கு உடம்பு சரி இல்லன்னா லீவ் எடுத்துக்க சொல்றோம்! மத்தபடி நல்லா இருக்கவங்க ஆபீஸ் வந்தா என்ன தப்பு?
சார்... 'Incubation Period' என்ற வார்த்தை உண்டு. அதாவது, கிருமி உடலில் ஊடுருவிய காலத்திற்கும் அந்த நபர் நோய்த்தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தும் காலத்திற்குமான இடைப்பட்ட பகுதி தான் 'Incubation Period'. இந்த Incubation period-ல் ஒருவர் தனது உடலில் கிருமித்தொற்றை கொண்டிருப்பார். ஆனால், நோய்க்கான எந்த அறிகுறியும் இருக்காது.
கொரோனா வைரஸின் Incubation Period 2 முதல் 14 நாட்கள். அதாவது கொரோனா தாக்கிய நபர் எந்த ஒரு அறிகுறிகளும் இல்லாமல் 2 முதல் 14 நாட்களுக்கு இருக்கலாம். உதாரணமாக ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு வைரஸ் தாக்கிய 5-ம் நாள் காய்ச்சல் வருகிறது. உடனே விடுப்பு கொடுத்து நீங்கள் அனுப்பி விடுகிறீர்கள். ஆனால், அந்த 5 நாட்கள் இடைவெளியான Incubation Period-ல் அவர் எத்தனை பேருக்கு கிருமியை பரப்பியிருப்பார்? அலுவலகத்தில் அவருடன் புழங்கும் எத்தனையோ மக்களுக்கு கிருமித்தொற்று சென்றிருக்கும்! ஆகவே தான் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டுகிறோம்.