பத்து வருசத்துக்கு முன்னாடி ஒரு ஊரில் வசிக்கும் ஆண்களில் நூத்தில் 5, 6 பேர் மட்டும் தான் மது அருந்தும் நபராக இருப்பார்கள். அவர்களையும் இந்த சமூகம் குடிகாரன் என்று ஒதுக்கி வைத்துவிடும். அவர்களும் எந்த தொல்லையும் பண்ணாமல் குடிச்சுப்புட்டு போய் பவ்யமாக தூங்கிருவாங்க. ஆனா இன்னைக்கு நூத்துல 95 பேர் மது போதைக்கு அடிமையாகியுள்ளனர்.
மது அருந்துவதை ஒரு பேஷனாக நினைக்கின்றனர். தண்ணி அடிச்சுப்புட்டு எல்லார்கிட்டயும் வம்பிழுத்து சண்டை போடுவது தான் மது அருந்துபவர்களின் பிரதான வேலை. சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் அரசு பேருந்தில் பெருமாள் என்ற 54 வயது மதிக்கத்தக்க முதியவர் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்.
அண்மையில் இவர் பேருந்தில் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் பேருந்து மேல்மருவத்தூர் அருகில் சென்று கொண்டிருந்த நேரத்தில் அந்த பஸ்ஸில் பயணம் செய்த ஒருவர் மது அருந்தியிருந்தார். அவர் வேண்டும் என்றே நடத்துனர் பெருமாளை சீண்டி இருக்கிறார். நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் எல்லை மீறிய அந்த போதை ஆசாமி நடத்துனரை தாக்கி உள்ளார். வயதான பெருமாள் அவருடைய தாக்குதலால் நிலை தடுமாறி மயக்கம் போட்டு பேருந்தில் விழுந்துவிட்டார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த நடத்துனரை கொண்டு செல்வதற்கு முன்னர் நடத்துனர் உயிரிழந்துவிட்டார். காவல்துறை பேருந்தில் நடந்த இந்த சம்பவத்தை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. மது அருந்திவிட்டு இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.