நிறைய நாட்கள் எனக்கும் என்னுடைய நண்பனுக்கும் பசி ஆற்றியிருகிறது அம்மா உணவகம். குறிப்பாக சென்னையில் தங்கி வேலை தேடிய, இப்போதும் தேடிக்கொண்டிருக்கிற என்னை போன்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு அம்மா உணவகம் ஒரு வரபிரசாதம். ஒருமுறை ஊருக்கு போன சமயம், எதிர்பாரா விதமாக பேருந்து பயணத்துக்கே பயணச் செலவு சரியாக இருந்தது. நண்பகல் வேளை என்பதால் கடுமையான பசி வேறு.
அப்போது நான் முன்னெச்சரிக்கையாக எனது பையில் எதற்கும் இருக்கட்டும் என ஒரு 10 ரூபாய் வைத்திருந்தேன். 10 ரூபாயில் என்ன சாப்பிட முடியும் என்று சிந்தித்த போது, ஏன் முடியாது என்பதுபோல் அம்மா உணவகத்தில் வயிறார உண்டு வந்தேன். முதன் முதலாக கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் வேலை தேடும் நிலையில் கையில் இருக்கும் காசை வைத்துக்கொண்டு மாதத்தில் 15 நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாது. எந்த வீண்செலவு இல்லை, எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பட்டினி கிடக்காமல் இரண்டு வேளை உணவாவது அம்மா உணவகம் மூலம் எனக்கும் என் நண்பர்களுக்கும் கிடைத்தது.
மூன்று ரூபாய் கொடுத்தால் பார்லே ஜி பிஸ்கெட் கிடைக்கும். அதுவே அம்மா உணவகம் சென்றாள் 3 ரூபாய்க்கு இரண்டு சப்பாத்தி கிடைக்கும். காலையில் வேலை இன்டர்வியூ செல்லும் முன் ஐந்து ரூபாய் இருந்தால் போதும் ஐந்து இட்லி கிடைக்கும் வாய்க்கு ருசியாக இல்லை என்றாலும் வயிற்றுக்கு பசி போக்கும். இப்போ அம்மா உணவகத்தில் வருமானம் இல்லை என்பதால், அதனை மூடி வைத்துவிட்டதாக சென்னை மேயர் ஒரு பேட்டியில் சொல்லி இருக்காங்க.
அம்மா, அது வருமானத்தை எதிர்பார்த்து கொண்டு வந்த திட்டம் இல்லைங்க. அன்றாடம் காய்ச்சி மக்கள் ஒருவேளையாவது சாப்பிட வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டது. இப்பொழுதும் அம்மா உணவகம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டால் யாரிடமும் கையேந்தாமல் படித்து முடித்து வேலை தேடும் பல இளைஞர்களுக்கு உதவும். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜெயலலிதா அம்மையாரின் போற்றப்பட வேண்டிய திட்டம் இந்த அம்மா உணவகம். இது பல காலம் தொடர வேண்டும்.